×

புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி, பாலயோகி நகரைச் சேர்ந்தவர் வர்ஷா (23). இவர் பீகாரைச் சேர்ந்த தீபக் (27) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற குழந்தை பிறந்தது. இந்நிலையில் தீபக் உயிரிழந்த நிலையில், தினேஷ் (28) என்பவரை வர்ஷா காதலித்து 2வது திருமணம் செய்து கொண்டார். இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். வர்ஷா மற்றும் தினேஷ் ஆகியோருக்கு திவான்ஷி என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில் தினேஷ் வழக்கம்போல் நேற்று பணி முடிந்து வீட்டில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வர்ஷா கடைக்கு சென்றிருந்தார்.

அப்போது குழந்தை சுப்புலட்சுமி (6) திடீரென காணாமல் போனதையடுத்து வீடு முழுதும் தேடியுள்ளார். கழிவறைக்குச் சென்று பார்த்தபோது அங்கிருந்த 2 அடி தண்ணீர் தொட்டியில் சுப்புலட்சுமி விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் குழந்தையை மீட்டு கும்மிடிப்பூண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை எற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதை அறிந்த சிப்காட் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வர்ஷாவின் முதல் கணவருக்கு பிறந்ததால் குழந்தை சுப்புலட்சுமியை தினேஷே தண்ணீரில் தள்ளிவிட்டு கொன்றாரா அல்லது தானாக விழுந்து இறந்ததா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Pudukummitipundi ,Kummidipoondi ,Varsha ,Palayogi town ,Pudukummidipoondi ,Deepak ,Bihar ,Subbulakshmi ,Dinesh ,
× RELATED கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியத்தில்...